காட்டேரிகளின் .......
மரணத்துகள் படர்ந்த
இரத்தச் சூத்திரத்தின்
நெறி பிளந்த
கரமாகிக்கொண்டிருந்தேன்
விரல் நுனி தொடங்கி
உயிர்முனை வரை
காலச்சீழைப் புரட்டிப் போடுகின்றது
அந்த ஊர்வனம்
சவப்பெட்டிகளை
பண்டமாற்றிக் கொள்கின்றாய்
சாவிடம்
உன் ரத்தத்தின் சகதியில்
குளிக்கின்றேன் நான்
நீ ஏற்றிய நெருப்பில்
பற்றிக்கொண்ட சிதை-சுடர்விடத்
தொடங்கிய பொழுதில்
நீ இறப்பின் நிர்வாணத்தை
ரசிக்கத் தொடங்கிவிட்டாய்
துரோகப் பாசறைகளில்
யோனி நெடிகள்
காற்றில் கலக்கின்றன
அலறல்கள்
அசிங்கங்கள் புசித்த
உனது குறியின் வேகம்
சோரம் போயிருந்தது
உனது நாட்காட்டியில்
நாட்கள் களவாடப்பட்டிருந்தன-எனது
தாயின் வெள்ளைச் சேலை
உரியப்படுகின்றது
மீண்டும் மீண்டும்
குரூரங்கள் துரோகங்கள்
எழுதப்படுகின்றன
உப்பிழந்த
கடல்வெளியில் ...!!

No comments:
Post a Comment